மோனை,எதுகை ,இயைபு,பெயர்ச்சொல்லின் வகையறிதல்
மோனை :
ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. மோனை இரண்டு வகைப்படும்.
அவை
- அடிமோனை
- சீர்மோனை
I. அடிமோனை:
முதலடி முதல் எழுத்தும் , 2ம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது
(எ.கா):
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
II. சீர்மோனை:
சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர்மோனை
(எ.கா):
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
சீர்மோனை ஏழு வகைப்படும்
அவை
1. இணை (1,2)
2. பொழிப்பு (1,3)
3. ஒரூஉ (1.4)
4. கூழை (1,2,3)
5. கீழ்க்கதுவாய் (1,2,4)
6. மேற்கதுவாய் (1,3,4)
7. முற்று (1,2,3,4)
1. இணை மோனை : (1,2)
ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற மோனை, இணை மோனை.
(எ.கா):
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
2 . பொழிப்பு மோனை: (1,3)
ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற மோனை பொழிப்பு மோனை
(எ.கா):
அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி”
3. ஒரூஉ மோனை (1.4)
ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ மோனை
(எ.கா)
அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி
4. கூழை மோனை (1,2,3)
ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற மோனை, கூழை மோனை
(எ.கா):
'அகன்ற அல்குல்' அந்நுண் மருங்குதல்
5. கீழ்க்கதுவாய் மோனை (1,2,4)
ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் மோனை
(எ.கா):
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
6. மேற்கதுவாய் மோனை{1,3,4)
ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் மோனை
(எ.கா):
அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்
7.முற்று மோனை (1,2,3,4)
ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற மோனை முற்று மோனை
(எ.கா):
கற்க கசடற கற்பவை கற்றபின்
எதுகை :
ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
எதுகை இரண்டு வகைப்படும்
அவை
- அடி எதுகை
- சீர் எதுகை
I.அடி எதுகை
அடிதோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை
(எ.கா):
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
II.சீர் எதுகை
சீர் தோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை
சீர்எதுகை ஏழு வகைப்படும்
அவை
1. இணை (1,2)
2. பொழிப்பு (1,3)
3. ஒரூஉ (1.4)
4. கூழை (1,2,3)
5. கீழ்க்கதுவாய் (1,2,4)
6. மேற்கதுவாய் {1,3,4)
7. முற்று (1,2,3,4)
1. இணை எதுகை (1,2):
ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற எதுகை இணை எதுகை
(எ.கா):
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியே
2. பொழிப்பு எதுகை (1.3) :
ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற எதுகை பொழிப்பு எதுகை
(எ.கா):
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
3. ஒரூஉ எதுகை (1.4) :
ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ எதுகை (எ.கா): ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
4. கூழை எதுகை (1,2,3) :
ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற எதுகை, கூழை எதுகை
(எ.கா):
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
5. கீழ்க்கதுவாய் எதுகை (1,2,4) :
ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் எதுகை
(எ.கா):
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
6. மேற்க்கதுவாய் எதுகை (1,3,4) :
ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் எதுகை
(எ.கா) :
கற்க கடசற கற்பவை கற்றபின்
7. முற்று எதுகை :
ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற எதுகை முற்று எதுகை
(எ.கா) :
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
இயைபு :
ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு.
(எ.கா) :
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இதில் ”ண்டி” என்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன.
இயைபு இரண்டு வகைப்படும்
அவை
- அடி இயைபு
- சீர் இயைபு
I. அடி இயைபு :
அடிதோறும் இறுதி எழுத்து, அசை, சொல் ஆகியன ஒன்றிவருவது அடி இயைபு
(எ-கா)
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்
II.சீர்இயைபு:
ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபு.
சீர்இயைபு ஏழு வகைப்படும்
அவை
1. இணை (1,2)
2. பொழிப்பு (1,3)
3. ஒரூஉ (1.4)
4. கூழை (1,2,3)
5. கீழ்க்கதுவாய் (1,2,4)
6. மேற்கதுவாய் (1,3,4)
7. முற்று (1,2,3,4)
1. இணை இயைபு (1,2)
ஒரு அடியின் 1,2 ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ஒன்றி வருவது இணை இயைபு
(எ-கா) :
மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே
2.பொழிப்பு இயைபு (1,3)
ஒரு அடியின் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு இயைபு .
(எ-கா) :
‘மற்றதன் அயலே முத்துறழ் மணலே’
3. ஒரூஉ இயைபு(1.4)
ஒரு அடியின் ஒன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ இயைபு.
(எ-கா) :
நிழலே இனியதன் அயலது கடலே
4.கூழை இயைபு (1,2,3)
ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது கூழை இயைபு. (எ-கா) :
மாதர் நகிலே வல்லே இயலே
5. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4)
ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களின் இறுதி எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் இயைபு.
(எ-கா) :
பல்லே தவளம் பாலே சொல்லே
6. மேற்கதுவாய் இயைபு (1,3,4)
ஒரு அடியின் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் இயைபு
(எ-கா) :
வில்லே நுதலே வேற்கண் கயலே
7. முற்று இயைபு (1,2,3,4 )
ஒரு அடியின் நான்கு சீர்களிலும் ஈற்றெழுத்து ஒன்றி வருவது முற்று இயைபு
(எ-கா) :
புயலே குழலே மயிலே இயலே
இலக்கணம் - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
பெயர்ச்சொல் என்றால் என்ன?
ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம்.
இடுகுறிபெயர்:
ஒரு பொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர்.
(எ.கா):
மரம்,மலை,மண்
காரணப்பெயர்:
ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர்.
(எ.கா):
நாற்காலி,கருப்பன்,
பெயர்ச்சொல்லின் வகைகள்
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
1. பொருட் பெயர்
2. இடப் பெயர்
3. காலப் பெயர்
4. சினைப் பெயர்
5. பண்புப் பெயர்
6. தொழிற் பெயர்
பொருட்பெயர் |
மனிதன், ஆடு, பந்து |
இடப்பெயர் |
மதுரை
, தமிழகம், இந்தியா |
காலப்பெயர் |
மணி,
கிழமை, வாரம்,மாதம், இளவேனில் |
சினைப்பெயர் |
கண்,
காது, கை, கால் |
பண்புப்பெயர் |
கசப்பு
, மஞ்சல்,அகலம், வட்டம் |
தொழிற்பெயர் |
பாடுதல்,
ஓடுதல் , உறங்குதல் |
1. பொருட் பெயர்
ஒரு பொருளைக் ( உயர்திணை மற்றும் அஃறிணை பொருளை) குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.
(எ.கா):
உயர்திணை : மலர்விழி,
உயிருள்ள அஃறிணை : பசு, குதிரை
உயிரற்ற அஃறிணை : கணினி, மலை
2. இடப் பெயர்
ஒரு இடத்தை (பொது இடப் பெயர் மற்றும் சிறப்பு இடப் பெயர்) சுட்டுகின்ற பெயர் இடப் பெயர் எனப்படும். (எ.கா):
பொது இடப் பெயர் : கோயில், ஊர் , மாவட்டம்
சிறப்பு இடப் பெயர் : இலங்கை, சென்னை
3. காலப் பெயர்
ஒரு காலத்தை ( பொதுக் காலப் பெயர் மற்றும் சிறப்புக் காலப் பெயர்) குறிக்கும் பெயர் காலப் பெயர் எனப்படும்
(எ.கா):
பொதுக் காலப் பெயர் : ஆண்டு, விநாடி, கிழமை, மாதம்
சிறப்புக் காலப் பெயர் : பங்குனி, இளவேனில்
4. சினைப் பெயர்
உறுப்புகளைக் (உயர்திணை மற்றும் அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும்) குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்
(எ.கா):
உயர்திணை சினைப் பெயர் : கைவிரல், கால்விரல்
அஃறிணை சினைப் பெயர் : மரக்கிளை, பூக்காம்பு
5. பண்புப் பெயர்
ஒரு பொருளின் பண்பைக் (வடிவம், சுவை, அளவு, குணம்) குறிக்கும் பெயர் பண்புப் பெயர் எனப்படும்.
(எ.கா):
வட்டம், கசப்பு, மூன்று, தீமை
6. தொழிற் பெயர்
ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற் பெயர் எனப்படும்.
(எ.கா):
உறங்குதல்
தொழிற் பெயர் இரண்டு வகைப்படும்
(i). முதல்நிலை தொழிற்பெயர்
பெரும்பாலும் வேர்ச்சொல்லாகவே வரும் முதலெழுத்து குறிலாக இருக்கும் அவை முதல்நிலை தொழிற்பெயர்
(எ.கா):
பெறு , சுடு
(ii). முதற்நிலைத் திரிந்த தொழிற்பெயர்
முதற்நிலைத் தொழிற்பெயரின் முதலெழுத்து நீண்டு வருமாயின் அது
முதற்நிலைத் திரிந்த தொழிற்பெயராகும்.
(எ.கா):
கெடுதல் - தொழிற்பெயர்
கெடு - முதற்நிலைத் தொழிற்பெயர்
கேடு - முதற்நிலை திரிந்த தொழிற்பெயர்
No comments:
Post a Comment